காஞ்சிபுரம்: உலக பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.சக்தி தலங்களில் முதன்மையாக விளங்கும் உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டும் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயில் முழுவதும் வண்ண விளக்குகளும் மலர் தோரணங்களும் அலங்கரிக்கப்பட்டன. காமாட்சி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரத்தருகே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தங்க கொடி மரத்தில் காமாட்சி அம்மன் படம் பொறித்த கொடியை கோயில் ஸ்தானிகர்கள் ஏற்றி வைத்தனர். அப்போது மேளதாளங்கள் முழங்க இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டு, பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. கொடியேற்ற உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தங்க பல்லக்கு உற்சவம் வரும் பிப்ரவரி 25 ஆம் தேதியும், ரத உற்சவம் பிப்ரவரி 27 ஆம் தேதியும், வெள்ளிதேர் உற்சவம் மார்ச் 1 ஆம் தேதியும், மார்ச் 4 ஆம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் உற்சவம் நிறைவடைகிறது. தினந்தோறும் இரு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதி வழியாக வலம் வந்து காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.
Comments